துறையூர், ஜூன் 4: துறையூர் அருகே கள்ளக்காதல் ஜோடி தகாத உறவில் ஈடுபட்டிருந்த போது பார்த்ததால் மூதாட்டியை கொலை செய்து கிணற்றில் தூக்கி வீசிய அந்தக் காதல் ஜோடியை போலீசார் நேற்று கைது செய்தனர். திருச்சி மாவட்டம் துறையூர் அருகே ஓசரப்பள்ளி காட்டுக்கொட்டகைப் பகுதியைச் சேர்ந்தவர் நல்லுசாமி மனைவி கண்ணம்மாள்(68). இவருக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் உள்ளனர். மூவரும் திருமணமாகி வெவ்வேறு ஊர்களில் வசிக்கின்றனர். தனியாக வசித்து வந்த இவரை கடந்த மே 26ம் தேதி முதல் காணவில்லை என்று கண்ணம்மாளின் பிள்ளைகள் போலீசில் புகார் கொடுத்து விட்டு தேடி வந்தனர்.
இந்நிலையில் மூதாட்டியின் சடலம் அந்தப் பகுதியில் உள்ள பிச்சைப்பிள்ளை என்பவரின் வயல் கிணற்றில் கிடந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். விசாரணையில், ஓசரப்பள்ளி காட்டுக்கொட்டகையை சேர்ந்த திருமால்குமரனின் மனைவி அமுதா(42) என்பவர்தான் கண்ணம்மாளைக் காணவில்லை என்று த.பாதர்பேட்டையில் உள்ள கண்ணம்மாளின் மகள் ரேணுகாவிடம் கூறியுள்ளார். அதன்பேரில் உப்பிலியபுரம் போலீசார் முதலில் அமுதாவிடம் விசாரணை செய்தனர்.
விசாரணையில் அமுதாவின் கணவரும், ஒரு மகனும் வெளிநாட்டில் வேலை செய்வதும், மற்றொரு மகன் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டு வெளியேறிவிட்டார் என்பதும், இதனால் தனியாக இருந்த அமுதாவுக்கும், அவருடைய கணவரின் நண்பரான ஓசரப்பள்ளி கிழக்குகாட்டு பகுதியில் வசிக்கும் நடராஜன் மகன் தமிழ்மாறனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரிந்தது. மேலும் இவர்களிருவரும் கடந்தமாதம் அமுதாவின் வீட்டில் தகாத உறவில் ஈடுபட்டிருந்த போது அமுதாவைத் தேடிச் சென்ற கண்ணம்மாள் அதனை பார்த்து விட்டராம்.
அவர் பார்த்ததை அமுதாவும், தமிழ்மாறனும் பார்த்து விட்டனராம். இதனால் தங்கள் கள்ளத் தொடர்பு ஊருக்குள் தெரிந்தால் அசிங்கமாகிவிடும் என்று கருதிய இருவரும் கடந்த மே 24ம் தேதி இரவு கண்ணம்மாள் வீட்டருகே காத்திருந்தனர். கண்ணம்மாள் கதவைத் திறந்து வீட்டுக்கு வெளியே இயற்கை உபாதை கழிக்க சென்றபோது அமுதா வீட்டுக்குள் சென்று மறைந்து கொண்டாராம்.
மீண்டும் கண்ணம்மாள் வீட்டில் வந்து படுக்கையில்படுத்தவுடன் அவர் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி அமுதா கொலை செய்துள்ளார். அதன் பின்னர் அமுதாவும், தமிழ்மாறனும் சேர்ந்து கண்ணம்மாளின் சடலத்தை அருகில் உள்ள பிச்சை என்பவரது வயல் கிணற்றில் தூக்கி வீசி விட்டனர் என்பதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது. இந்த நிலையில் கண்ணம்மாள் கொலை வழக்கில் அமுதா, தமிழமாறன் ஆகிய இருவரையும் நேற்று உப்பிலியபுரம் போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதல் ஜோடி கைது கண்ணம்மாள் கதவைத் திறந்து வீட்டுக்கு வெளியே இயற்கை உபாதை கழிக்க சென்றபோது அமுதா வீட்டுக்குள் சென்று மறைந்து கொண்டாராம். மீண்டும் கண்ணம்மாள் வீட்டில் வந்து படுக்கையில்படுத்தவுடன் அவர் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி அமுதா கொலை செய்துள்ளார்.